Monday, October 31, 2011

ஓம் போக பெருமானே போற்றி

ஊதியூர்

ஊதியூர்

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

-------------------------------------------------------



      ஊதியூர் கொங்கு மண்டலத்தில் அமைந்து உள்ள இன்னொரு அமைதியான ஆதி சித்தரின் (முருகர் )திருக்கோயில்.

ஐயனின் சீடருள் ஒருவரான கொங்கன சித்தர் வாசம் செய்த இடமாகும் , நூறு படிகளுக்கும் குறைவான உயரமுள்ள குன்று , பழனியில் உள்ள தண்டாயுதபாணியை போலவே இங்கும் தண்டத்துடன் கோவணாண்டியாக கட்சி அளிக்கிறார் ஆதி சித்தர் .

இந்த சிலை கொங்கன சித்தரால் வடிவமைக்கப்பட்டது என்று கூறுகிறார்கள் , அடியேனுக்கு இதுவும் நவபாஷான சிலையாக இருக்குமோ என்ற சந்தேகம் உண்டு . 

அருகில் ஒரு மையில் தொலைவில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது , ஜன சஞ்சாரம் முற்றிலும் அற்ற இடம் . நீண்ட நேரம் தபோ நிஷ்டை கொள்ள ஏற்ற இடம் .
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை காச்சி
எல்லோருக்கும் அளிப்பதாக கேள்வி , அடியேன் நேரில் கண்டது இல்லை , அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் , முடிந்தவர்கள் சென்று வாருங்கள் , மன்னிக்கவும் ரசத்தை அருந்தி வாருங்கள் .

கிட்டத்தட்ட மூன்றாவது பயணத்தில் தான் என்னால் இந்த கோயிலுக்குள் செல்லவே முடிந்தது , அவ்வளவு கர்ம வினைபோல எனக்கு , முதல் முறை இங்கு செல்ல நினைத்து , நண்பர் சதுரகிரி பிரபாகரை அழைத்துக்கொண்டு , இருவரும் வெள்ள கோயிலில் இருந்து புறப்பட்டோம் , காங்கேயம் அருகில் சென்று கொண்டு இருந்த பொழுது , நண்பர் திடீர் என்று வண்டியை நிறுத்த சொல்லி ஒரு பள்ளத்தில் விட சொன்னார் , எனக்கு ஒன்றும் புரியவில்லை , சரி என்று பள்ளத்தில் இறக்கி நிறுத்திய பொழுது , எதிரில் ஒரு வயதான நபர் , சிறிது சடை முடியுடனும் , அழுக்கு வேட்டி , சட்டை அணிந்து இருந்தார் , அவரிடம் இரண்டு நபர்கள் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தார்கள் , அவரை சுற்றி நிறைய உணவு பொட்டலங்களும் , தண்ணீர் பாட்டில்களும் கிடந்தது , அருகில் சாக்காடை , மனிதர் எதை பற்றியும் கவலை படாமல் பரமானந்தமாக அமர்ந்துகொண்டு சிரித்துக்கொண்டு இருந்தார் , அவரிடம் ஒரு மத்திம வயதுள்ள பெண் தன் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார் .



நான் நண்பர் பிரபாகரை பார்த்து , யார் தலைவரே இவர் , பார்பதற்கு ஒரு மார்க்கமாக இருக்கிறார் என்று வினவினேன் , நண்பர் அமைதியாக இருக்கவும் , இவரும் ஒரு யோகி என்று அமைதியாக சொல்லிவிட்டு அவரை வணங்க ஆரம்பித்தார் . 

நான் சிறிது நேரம் அவர் அருகில் நின்றுகொண்டு இருந்தேன் , பிறகு ஒரு உந்துதலின் பேரில் அவரின் அருகில் அமர்ந்தேன் , அவர் சாக்கடையில் படுத்துக்கிடந்தாலும் , அவர் மேல் எந்தவிதமான அருவருக்கத்தக்க வாடையும்  வீச வில்லை , அமர்ந்து சிறிது நேரத்தில் சமந்தமே இல்லாமல் சரத்தை பற்றி பேச ஆரம்பித்தார் , என்ன இவர் திடீர் என்று வேறு எதை பற்றியோ பேசுகிறாரே  , என்று யோசிக்க ஆரம்பித்தால் , மேலும் விரலின் உதவிகளால் சுவாசத்தை மாற்ற ஆரம்பித்தார் , இடைகளையில் சுவாசத்தை வைத்துக்கொண்டு , நானும் இப்போது பெண் தான் என்றார் , எனக்கு நன்றாகவே புரிந்தது அவர் என்ன சொல்ல வருகிறார் என்று .

சரி இதற்க்கு மேலும் சும்மா உட்கார்ந்து இருப்பது தவறு என்று நினைத்து , அவரிடம் ஆசீர்வாதம் வாங்க குனிந்தது தான் தாமதம் , அவர் என் தலையில் கை வைத்தார் , அப்பா உடம்பு முழுவதும் ஒரு மிக பெரிய அதிர்வு சில வினாடிகள் , உடம்பு அதிர்ந்து விட்டது , சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்து விட்டு கோயிலுக்கு செல்ல அனுமதி கேட்டோம் , அவரும் சிறிது நேரம் இரு , சிறிது நேரம் இரு என்று சொல்லிவிட்டு , இருட்டும் வேலையில் விடை கொடுத்து அனுப்பினார் , போகும் பொழுது மீண்டும் அடுத்த வாரம் வந்து பார்க்கும் படி பணித்தார் அந்த வாசி யோகி .

இருட்டும் வேலையில் ஊதியுறை நோக்கி மீதம் இருக்கும் இருபது கிலோமீட்டர் தூரத்தை அவசர அவசரமாக கடந்தோம் , நேராக கொங்கன சித்தரின் குகை நோக்கி எங்கள் இருசக்கர வாகனத்தை செலுத்தினோம் , ஓற்றை அடி பாதையில் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று வண்டியை லாக் செய்து விட்டு , கரடு முரடான மலை பாதையில் ஏற ஆரம்பித்தோம் , சுமார் பதினைந்து நிமிட நடையில் வந்தது கொங்கன சித்தரின்  குகை , குகையை பார்த்தவுடன் ஒரு சிறிய அதிர்ச்சி , காரணம் சதுரகிரியில் அய்யன் போகர் முதல் சித்தரின்  குகை , காலங்கி ஐயாவின் குகை , சுருளியில் உள்ள ஐயனின் குகை மேலும் நான் பார்த்த திருமூலர் வழித்தோன்றல் சித்தர்களின் குகைகள் அனைத்துடனும் இந்த குகையின் தோற்றமும் ஒத்துப்போனது , நன்கு நிசப்தமான ஒரு சூழல் , சுற்றிலும் ஆள் அரவம் இல்லை , அப்படியே அந்த அமைதியான சூழலுக்கு ஏற்ப மனதும் உலகாய விஷயங்களில் இருந்து வெளிவந்து அமைதியான நிலைக்கு சென்றது , குகை உள்ளே சென்று அங்கு இருக்கும் லிங்கத்தை வணங்கி சிறிது நேரம் அமர்ந்தோம் , சிறிது நேரத்தில் மனதில் இருந்த அமைதியான சூழலும் மாறி அதற்க்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு இடத்திற்கு பயணப்பட்டது .

கொங்கன சித்தரின் குகை - ஊதியூர்


நண்பர் நேரம் முழுக்க  இருட்டி விட்ட காரணத்தால் என்னை இறங்கும் படி சொன்னார் , ஹ்ம்ம் வேறு வழி இல்லாமல் திரும்பவும் உலக கடமைகளுக்காக  கீழ் இறங்க ஆரம்பித்தோம் . திரும்பும் பொழுது நல்ல மழை , கிட்ட தட்ட ஐந்து , ஆறு மணி நேரம் விடாமல் மழை பெய்து கொண்டு இருந்தது , பொதுவாக இதை போன்ற மழைகாலங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டு செல்வது எனக்கு பிடித்த விஷயம் என்பதால் நன்றாக அனுபவிக்க முடிந்தது . ஆனால் ஊதியூர் முருகர் கோயிலை சென்று தரிசிக்க முடியவில்லை , கோயில் துப்புரவாக பூட்டி இருந்தது 

இரண்டாவது நாள் , மீண்டும் இருவரும் சென்றோம் ஊதி அப்பனை தரிசனம் செய்ய , இன்றும் கோயில் பூட்டியே கிடந்தது , கோயிலுக்கு வெளியில் கோடி கம்பத்து அருகில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து விட்டு மீண்டும் நாளை வருவதாக தீர்மானம் செய்து கொண்டு கிளம்பினோம் , இன்றும் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது .

மூன்றாவது நாள் வீட்டில் இருந்து கிளம்பும் முன் நண்பருக்கு கால் செய்து வரும்படி அழைத்தேன் , அவருக்கு முக்கிய அலுவல் சிலது இருந்ததால் அவரால் வர இயிலவில்லை என்றார் , சரி நாளை செல்லாம் என்று நானும் அலுவலக வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டேன் , மனம் அதில் முழுமையாக நிலைக்க வில்லை , எதை செய்தாலும் அதை முழுக்க செய்தால் தான் எனக்கு திருப்தியாக இருக்கும் , அதனால் ஊதியுருக்கு செல்ல தீர்மானித்து செல்ல ஆரம்பித்தேன் , மூன்றாவது நாள் , இன்றாவது அவரின் தரிசனம் கிடைக்குமா என்ற கேள்வி மனதில் .

மணி ஒரு ஐந்தரை இருக்கும் , மலை மேல் செல்லும் பொழுது , கோயில் கதவு இன்றும் சாத்தியே இருந்தது , என்ன முருகா இன்னைக்கும் சாத்தி இருக்கு , அவ்ளோ கர்மம் என்ன பிடிச்சு இருக்கானு கேட்டுட்டு கோயில் கதவு கிட்ட போய் பாத்தா பூட்டு போடாம சும்மா சாத்தி இருந்தது , சரி முயற்சி பண்ணி பாப்போம்னு கதவ கொஞ்சம் போல தள்ளினேன் , திறந்தது .










கோயில் , கோயிலை போலவே வெகு சுத்தமாக , மிக மிக அழகாக , சரியான வரையறையுடன் இருந்தது , கைகள் சும்மா இருக்குமா என்ன , ஐயனிடம் உத்தரவு கேட்டுக்கொண்டு , கைகூப்பி வணங்கி விட்டு போடோக்களை எடுக்க ஆரம்பித்தேன் , பின்னால் அமைதியாக ஒரு உருவம் வந்து நின்றது , யார் என்று திரும்பி பார்த்தால் அந்த கோயில் குருக்கள் , பரஸ்பரம் அறிமுகத்திற்கு பிறகு அவர் மூலஸ்தானத்திற்கு அழைத்து சென்றார் , அவ்வளவு அழகான முகம் இந்த ஆதி சித்தருக்கு , மனதை கஷ்டப்பட்டு அவரிடம் செலுத்த தேவை இல்லை , மனம் தானாகவே அவரிடம் லயித்து விடும் அப்படி ஒரு ஈர்ப்பு .

தீபாராதனை காட்டி வணங்கி   விட்டு , குருக்களிடம் பேச ஆரம்பித்தேன் , இந்த கோயில் நன்றாக பராமரிக்கப்படுகிறதே , எத்தனை நபர்கள் இங்கு வேலை பார்கிறீர்கள் என்று கேட்டேன் , அவர் பதில் ஆச்சரியமும் , அதிர்ச்சியும் அளித்தது , காரணம் அவர் ஒருவர் மட்டுமே அந்த கோயிலை பராமரித்துக்கொண்டு இருக்கிறார் , நீங்களும் ஒருமுறை சென்று பாருங்கள் நான் ஆச்சரியபட்டதில் எந்த அதிசயமும் இல்லை என்பீர்கள் .

இந்த கோயில் வருமானத்தை நம்பியே அவரின் மொத்த குடும்பமும் உள்ளது என்பது மிக மிக வருத்தத்தில் ஆழ்த்தியது என்னை , காரணம் இங்கு வருகை தரும்  நபர்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே , அவர்களும் தக்ஷனை போடுவார்களா என்பது சொல்லமுடியாது , அவரின் நிலை எனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக கூறினேன் , ஆனால் அவர் மிக மிக சாதரணமாக அழகாக சிரித்துக்கொண்டு , இது சித்தர்கள் வாசம் செய்யும் பூமி , இங்க இப்படி தான் இருக்கும் , நாம கூடம் கூட்டவோ , வருமானத்தையோ எதிர் பார்க்க கூடாது , அவாளுக்கு சேவை செய்றதே பெரிய  பாகியம்னார் பாருங்க , இத என்னனு சொல்றது .
http://bhogarsiddhar.blogspot.com/2011/05/blog-post.html 
ஊதியூர் செட்டிதம்புரன் குகை உங்கள் பார்வைக்கு 

ஓம் சிவ சிவ ஓம் 


No comments:

Post a Comment