Thursday, November 10, 2011

அதுதான் பெரியவர்.


வாழ்க்கை முழுக்க , கம்பெனி, வேலை - சம்பளம் , அதுல குடும்பத்தை ஓட்டனும் ... இப்படியே அடுத்தவங்களுக்கு வேலை செஞ்சு , அப்படியே வாழ்க்கையை முடிச்சிடப் போறோமா? கடைசி


காலத்துல, உடம்பு எல்லாம் தளர்ந்து , அடங்கின பிறகுதான் , நம்மளைப் பத்தி யோசிப்போமா..?


வாழ்க்கையிலே எவ்வளவோ வெட்டித்தனமான வேலைகள் எல்லாம் செஞ்சு இருக்கோம். கொஞ்ச நஞ்ச அநியாயமா பண்ணி இருக்கிறோம்?  ஒரு தடவை, உருப்படியான செயல் ஒன்னு செஞ்சு பார்ப்போமேன்னு தான் இந்த முயற்சி.


சில நல்ல காரியங்களை செய்யும்போது , அதனால் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானது. சில ஆலயங்களுக்கு செல்லும்போது , ஒரு சிலர் ஏதாவது மந்திர ஸ்லோகங்கள் அடங்கிய தாள்களை நோட்டீசாக கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். நம்மிலும் நிறைய பேர், அதை வாங்கி இருப்போம். அவர்கள் ஏதும் பலன் இல்லாமல் , இதைப் போல காசை கரியாக்கும் வேலையை செய்வார்களா? நிச்சயமாக இருக்காது. இந்த மாதிரி செயல்கள் செய்யும்போது அவர்களுக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி இருக்கிறதே , அதற்க்கு விலை மதிப்பே இல்லை.

ஒரு சிலருக்கு , இந்த மாதிரி தெய்வீக காரியங்களை செய்யும்படி ,யாராவது பரிந்துரை செய்தும் இருக்கலாம். இது எந்த விதத்தில் உதவும் என்பதை, இந்த கட்டுரை முடிவில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 

காஞ்சிப் பெரியவர் - அஷ்டமா சித்திகளை அடைந்த ஒரு அவதார புருஷர். ஆனால், துளி கூட கர்வமின்றி, அதை எந்த ஒரு சுய நலத்துக்கும் பயன் படுத்தாத மகான். அவரைப் போன்ற புண்ணிய ஆத்மாக்கள் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையை இன்றும் பண்படுத்திக் கொண்டு இருக்கின்றன.

பெரியவரின் பக்தர் ஒருவர் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான, உண்மை சம்பவத்தை இன்று நாம் பார்க்க விருக்கிறோம். 
காஞ்சி பரமாச்சாரியாரின் அடியார்களில் ஒருவர் ஒருமுறை கல்கத்தாவைச் சேர்ந்த சேட்டு ஒருவரை அவரிடம் கூட்டிவந்தார். அந்த சேட் மிகவும் வசதிபடைத்தவர். பக்தியும் பணிவும் கொண்டவர்.
அவருக்குக் கடுமையான நோயொன்று சிரமம் கொடுத்தது. இரைப்பைக்கு மேலேயுள்ள உணவுக்குழாயின் இயக்கத்தில் பாதிப்பு. அதன் விளைவாக உணவை வயிற்றில் துவாரம் போட்டு

அதன்மூலம் உணவு செலுத்தப்பட்டு வந்தது.

இருப்பினும் அதையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்தார். எந்த விதமான வைத்தியமோ, கோயில்களில் செய்யப்படும் பிரார்த்தனையோ, மாந்திரீகமோ எதுவுமே அவருக்குப் பலிக்கவில்லை.

அவர் பரமாச்சாரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆகவே அவரைப் பார்க்க அழைத்துச்செல்லுமாறு அவருடைய நண்பராகிய அடியாரை வற்புறுத்தினார்.
பரமாச்சாரியாரிடம் சொன்னபோது அவர் முதலில் பார்க்க மறுத்துவிட்டார்.
அதனால் சொல்லாமல் கொள்ளாமல் அந்த அடியார் அந்த சேட்டை அழைத்துக்கொண்டுபோய் பரமாச்சாரியாரின் முன்னிலையில் நின்றார். 

அந்த அடியார் என்ன சொல்லியும் பரமாச்சாரியார் ஒன்றுமே பதில் சொல்லவில்லை.
இரவு வெகுநேரமாகிய பின்னர் அதைப் பற்றி பேசினார்.

ஆனால், இதற்கெல்லாம் ஒன்றும் செய்யமுடியாது; பக்தியுடன் இருந்து நல்ல காரியங்களை நிறையச்செய்யுமாறும் சொல்லிவிட்டார்.

அடியார் விடவில்லை. எப்படியும் இதற்கெல்லாம் விமோசனம்,  பரிகாரம் இருந்துதான் ஆகவேண்டும் என்று பணிவுடன் வாதிட்டு பரமாச்சாரியரை மிகவும் உரிமையுடனும் நம்பிக்கையுடனும் வற்புறுத்தினார்.

 
சிறுது நேரம் மௌனமாக இருந்த பரமாச்சாரியார், அந்த சேட்டிடம் தாம் சொல்வதை அப்படியே செய்யுமாறு வாக்குறுதி கேட்டார். சேட் ஒத்துக்கொண்டார்.
இந்து சமயத்திலுள்ள பதினெட்டுப் புராணங்களையும் பதினெட்டுத் தனித்தனிப் புத்தகங்களாக சமஸ்கிருதத்தில் அச்சிட்டு, தகுதியுடையவர்களாகிய வேத நூல் படிப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று பரமாச்சாரியார் ஆணையிட்டார். 

 பரமாச்சாரியாரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சேட் அந்த நற்காரியத்தைத் தாம் செய்வதாக ஒத்துக்கொண்டார். பரமாச்சாரியர் அந்த சேட்டை ஆசிர்வதித்துப் பிரசாதம் வழங்கச்செய்தார்.
கல்கத்தாவுக்குச் சென்ற சேட், தம்முடைய ஐந்து மாடிக்கட்டடத்தின் மேல்மாடி முழுவதையும் புராண வெளியீட்டிற்காக ஒதுக்கினார். பல சாஸ்திர விற்பன்னர்களை கூட்டுவித்தார். அவர்களின்மூலம் தரமான காகிதத்தில் சுத்தமாக அச்சிட்டுப் பெரிய பெரிய புத்தகங்களாக வெளியிட்டுக் கொடுத்தார்.

 'பக்தியே விலை' என்றும் குறிப்பிடச் செய்தார், சேட்.    
பதினேழு புராணங்கள் அச்சிடப்பட்டுவிட்டன.
ஆனால் சேட் வழக்கம்போல் குழாய்மூலமே உணவு செலுத்தப்பட்டு வந்தார்.

ஆனாலும்கூட சேட் அதைப் பற்றி கவலையும்படவில்லை. அவர்பாட்டுக்கு புராண வெளியீட்டை நம்பிக்கையுடன் ஒரு கர்மயோகமாகச் செய்தார்.

கடைசியாக ஸ்கந்த புராண வெளியீட்டு வேலை தொடங்கியது.

 
அவ்வளவுதான்.
திடீரென்று ஒருநாள் சேட் சாப்பாட்டை வாயால் மென்று விழுங்கி சாப்பிடத் துவங்கினார்.

நன்றாக ரசித்து ருசித்துச் சாப்பிட்டார்.

அதுவரை தீராமல் இருந்த நோய் பரமாச்சாரியார் பேரருளால் நீங்கியது.

பரமாச்சாரியாரைப் போய்ப் பார்த்து விபரத்தைச் சொன்னார்கள்.

பரமாச்சாரியரின் ஆற்றலை வியந்து அவர் தந்த வரத்தால் சேட்டின் நோய் நீங்கிப் பிழைத்துக் கொண்டதாக அந்த அடியார் சொல்லி, 'பரமாச்சாரியார்தான் கடவுள் என்றும் சொன்னார்.

ஆனால் பரமாச்சாரியாரோ ரொம்பவும் 'கூலாக'ச் சொல்லியிருக்கிறார்.

"நம்ம நாட்டோட தர்ம சாஸ்திரங்களோட சக்தியல்லவா அவரக் காப்பாத்தியிருக்கு?"


அதுதான் பெரியவர்.  

Read more: http://www.livingextra.com/2011/10/blog-post_22.html#ixzz1dFVhqQql

No comments:

Post a Comment