Tuesday, November 29, 2011

நட்சத்திரம் - கிரகம் - மனிதன்

ஜோதிடம் வேத சாஸ்திரத்தின் ஓர் அங்கம்.
ஜோதிடத்தை கண்டு பிடித்தது இன்னார் என சுட்டிக்காட்ட முடியாது.
சாஸ்திரம் என்பது
முற்றிலும் கண்டறியபட்ட மெஞ்ஞானம் என பொருள் கொள்ளலாம். ஜோதிடம் என்பதும் சாஸ்திரம் எனும் தலைப்பிற்கு கீழ் வரும் ஓர் மெஞ்ஞானமாகும்.

தனிஒரு மனிதனால் கண்டுபிடிக்கபட்ட எந்த ஒரு சித்தாந்தமும் விஞ்ஞானம் என்றே அழைக்கப்படும். சாஸ்த்திரங்கள் எல்லாம் யார் கண்டுபிடித்தார் என கூறப்படாமல் இருக்கும், காரணம் அவை இறையருளால் மனித இனத்திற்கு தரப்பட்டது என்பதே உண்மை.

வராக மிஹிரர், பராசரர் மற்றும் ஜெயமினி என்ற முனிவர்கள் கண்டுபிடிக்கவில்லையா என கேட்கலாம். அவர்கள் தெய்வீகம் எனும் நதி வழிந்தோடும் பகுதியின் கரையாக இருந்தார்கள். அதாவது ஜோதிட சாஸ்திரம் உலகுக்கு கொடுக்க இறைவனால் தேர்ந்தெடுக்கபட்ட கருவிகள். சில முட்டாள்கள் ஜோதிடத்தின் வரலாறை சொல்லும் பொழுது “ஆட்டு இடையர்கள் வானத்தை ஆராய நிறைய நேரம் கிடைத்தது அதனால் வானசாஸ்திரத்தை கண்டறிந்து முதலில் அவர்களுக்கு பிடித்த ஆட்டை ராசியின் வடிவமாக கொடுத்தார்கள்” என்கிறார்கள். சிறிது சிந்தித்து பாருங்கள் ஆட்டு இடையர்கள் கண்டறிந்தார்கள் என்றால் இன்றைய ஆட்டு இடையர்கள் ஏன் ஜோதிடர்களாக இல்லாமல் , புதிய கண்டுபிடிப்பு செய்யாமல் வெறும் ஆட்டுக்காரர்களாகவே இருக்கிறார்கள்? விட்டால் ஏசு நாதர் ஆடு மேய்த்தார் அவர்தான் முதல் வானியல் நிபுணர் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

ஜோதிடத்தின் வரலாற்றை பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாம் ஓய்வாக இருக்கும் சமயம் அதை பற்றி பேசுவோம். இப்பொழுது ஜோதிடம் பற்றி அடிப்படை விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.


கிரகங்களுக்கு உண்மையில் வேலை செய்யுமா?


உங்கள் நண்பர் ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார் என கொள்வோம். உடனடியாக அவரின் வாழ்க்கையை மேம்படுத்தி கோடீஸ்வரர் ஆக்க முடியுமா?

முடியாது...
அவரின் சாதாரண நிலையிலிருந்து கீழ் இறக்கி ஒன்றுக்கும் ஆகாதவராக பிச்சை எடுப்பவறாக மாற்ற முடியுமா?

அதுவும் முடியாது.

உணர்வு நிலையில் தொடர்பு கொண்ட, கண்களால் பார்த்து உணரக்கூடிய உங்கள் நண்பரை இது போல மாற்றம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பொழுது....

கண்களால் பார்க்க முடியாத.. உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட கிரகம் இதை எல்லாம் செய்கிறது என்கிறார்களே அது எப்படி?

சுக்கிரன் வந்தது கோடீஸ்வரன் ஆனார், சனி வந்தது காணாமல் போனார் என்கிறார்களே?

கிரகத்திற்கு உண்மையில் சுயமான சக்தி கிடையாது.


புரிகிறது ... வேறு ஏதோ இணைய தளத்திற்கு வந்துவிட்டோமா என முழிக்கிறீர்கள்.

கிரக சக்தி கண்களுக்கு தெரிவதில்லை. அதனால் ஜோதிடம் இல்லை, கிரக சக்தி இல்லை என சொல்ல முடியாது.

அலைபேசியை உதாரணமாக கொள்வோம். அலைபேசியில் அதன் அலைகள் கண்களுக்கு தெரிவதில்லை. நம்மை ஒருவர் அலைபேசியில் அழைத்தால் அது எந்த திக்கிலிருந்து வருகிறது என நம் கண்களில் தெரிவதில்லை. அதற்காக அலைபேசி என்பது பொய் என நாம் எண்ணுவதில்லை. அதுபோல தான் கிரக சக்தியும்.

கிரகத்திற்கு சக்தி கிடையாது என கூறினேன். ஆனால் சக்தியே கிடையாது என சொல்லவில்லை. கிரகம் தனித்து இயங்காது. ஆனால் நட்சத்திரம் எனும் மாபெரும் சக்தி அதன் பின்புலத்தில் வேலை செய்தால் தான் இயங்க முடியும்.





அலைபேசி எப்படி வேலை செய்கிறது என்பதை ஆராய்தால் நட்சத்திரம் - கிரகம் - மனிதன் எப்படி இயங்குகிது என புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.


அலைபேசியில் ஒருவர் மற்றொருவருக்கு தொடர்பு கொள்கிறார் என்றால் முதலில் அந்த அலைகள் அருகில் இருக்கும் கோபுரத்திற்கு (TOWER) செல்லும் அங்கிருந்து அலைபேசி மாற்றிக்கு (Tele Exchange) செல்லும் பின்பு இதே செயல் நடந்து மற்ற அலைபேசிக்கு சென்றடையும்.

அது போலதான் நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் கிரகத்தினால் பிரதிபலிக்கப்பட்டு நமது தாய் கிரகமான பூமிக்கும் எதிரொளிக்கப்படுகிறது.

மனிதனும் மற்ற ஜீவராசிகளும் ஏன்.. அனைத்தும் இதனால் இயங்குகிறது.




எனவே நட்சத்திரம் இல்லாமல் கிரகங்களும், கிரகங்கள் இல்லாமல் நட்சத்திரமும் பூமிக்கு ஆற்றலை வழங்க முடியாது. இரண்டு விஷயங்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

இங்கு வானவியல் பற்றி பேசவேண்டும். வானவியல் (Astronamy) என்பது ஓர் விஞ்ஞான சித்தாந்தம். கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளி பற்றி ஆராயும் சித்தாந்தம்.

வானவியல் ஜோதிடத்தின் அடிப்படை என சொன்னாலும், முழுமையான வானவியல் நமக்கு பயன்படாது. கிரகங்களின் சுற்றுபாதை, சூரிய மண்டலத்தின் அமைப்பு இதுவெல்லாம் வானவியல் மூலம் நமக்கு கிடைக்குமே தவிர ஜோதிடத்தை பற்றி நாம் இங்கு பேசிய கிரக ஆற்றல் எனும் கருத்து வானவியலில் இல்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள வானவியல் கிரகங்கள் பார்ப்போம்.

1) சூரியன் 2) புதன் 3) சுக்கிரன் 4) பூமி 5) செவ்வாய் 6) குரு 7) சனி 8) யூரைனெஸ் 9 ) நெப்டியுன் 10) ப்ளூட்டோ

இதில் சூரியன் என்பது ஓர் நட்சத்திரம், மற்றவை அனைத்தும் கிரகம். இதில் ப்ளூட்டோ என்பது தற்சமயம் கிரகம் அல்ல என அறிவிக்கப்பட்டுவிட்டது.


ஜோதிட ரீதியான கிரகங்களை பார்ப்போம்.

1) சூரியன் 2) சந்திரன் 3) செவ்வாய் 4) புதன் 5) குரு 6) சுக்கிரன் 7)சனி 8) ராகு 9) கேது.

வானவியல் கிரகத்திலும் , ஜோதிட ரீதியான கிரகத்திலும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா?
ஜோதிட ரீதியான கிரகங்களில் பூமி என்பது இல்லை, ராகு கேது என்பது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.




இதற்கு காரணம் என்ன?

வானவியல் என்பது விண்வெளி பொருட்களை கொண்டு ஆய்வு செய்யும் ஓர் அறிவியல், ஜோதிடம் என்பது விண்வெளியில் இருக்கும் ஆற்றல் மண்டலங்களை பற்றி ஆய்வு செய்யும் ஓர் மெய்ஞ்ஞானம்.

நட்சத்திர மண்டலங்கள் மூலம் வெளிப்படும் ஆற்றல் ஆனது பூமிக்கு எந்த பகுதியிலிருந்து பிரதிபலிக்கபடுகிறதோ அந்த பகுதியை கணக்கில் கொண்டு ஆய்வு செய்வது ஜோதிடம். பூமி நாம் இருக்கும் இடம் ஆகையால் இங்கு வந்தடையும் ஆற்றலை தான் நாம் கணக்கிடுவோம், மாறாக பூமியை இதில் இணைக்க முடியாது.

ராகு கேது என்பது என்ன?

விண்ணில் எந்த புள்ளியில் நட்சத்திர ஆற்றல் பிரதிபலிக்கப்படுகிறதோ அப்புள்ளி நமக்கு மிகவும் முக்கியமானது. பூமியின் வட்டபாதையும், சந்திரனின் வட்டப்பாதையும் இணையும் இடத்தில் விண்கற்களோ, விண் தூசுக்களோ இல்லாமல் வெற்றிடமாக வெறுமையாக இருக்கும். இந்த புள்ளியில் ஆற்றல் அதிக அளவில் கடத்தப்படும். ( வெற்றிடத்தில் ஆற்றல் பரவும் என்பது விஞ்ஞான தத்துவமும் கூட)

ராகு-கேது புள்ளிகளில் பூமியின் நிழல் படிவதால் அதை சாயா கிரகம் ( நிழல் கிரகம்) எனவும் அழைக்கிறார்கள்.




ஜோதிட ரீதியான கிரகங்கள் எனும் பட்டியலை பார்த்தீர்களா? அதன் வரிசையை ஞாபகம் வைக்க எளிய வழி உண்டு. ஞாயிறு முதல் சனி கிழமை வரை மனதில் வரிசையாக சொல்லி அத்துடன் ராகு / கேதுவை இணைத்து கொண்டால் போதுமானது.

உலகின் அனைத்து காலண்டரிலும் கிழமை ஒன்றாக இருப்பதன் காரணம் புரிகிறதா?

No comments:

Post a Comment